ஜனாதிபதி, எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
இலங்கையில் 28 வீதம் குறைவடைந்துள்ள வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.
கடல் மாசடைதல் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
அத்துடன், நிர்மாண நடவடிக்கைகளுக்காக அதிகளவில் மணல் மற்றும் மண் அகழ்வதன் காரணமாக ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக தொழிநுட்ப மாற்றீடுகள் மற்றும் முன்மொழிவுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துமாறு எரிக் சொல்ஹெய்மிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நோர்வே அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் குறித்தும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
சுற்றாடல் பாதுகாப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks HIRU NEWS....
No comments